சுவேத விநாயகர்
ஆலயம் தேடுவோம் எனும் இந்தத் தொடரில் சைவ ஆலயங்கள், வைணவ திருத்தலங்கள், சக்தி பீடங்கள், விநாயகப் பெருமான் மற்றும் முருகப்பெருமானின் திருத்தலங்கள் என்று பலதரப்பட்ட ஆலயங்களைப் பற்றிய வரலாறு, புராண செய்திகள், அமைவிடம் மற்றும் வழிபடும் முறைகள், ஆலயத்தின் சிறப்புகள் போன்ற பல தகவல்களைக் காண இருக்கிறோம். அன்பர்கள் தங்களுக்கு மானசீகமான ஈடுபாடு உள்ள தளங்களை தேர்ந்தெடுத்து தரிசிக்கலாம்.
தமிழ் கூறும் நல்லுலகில் ஆன்மீக ஈடுபாடு உள்ள ஒவ்வொருவரும் படித்து பயன்பெற வேண்டும் என்பதே எமது விருப்பம்.
இன்றைய பகுதியில் நாம் காண இருப்பது திருவலஞ்சுழி - சுவேத விநாயகர்.
3.சுவேத விநாயகர் - திருவலஞ்சுழி.
தலவிசேஷம்:
காவிரி வலமாகச் சுழித்துச் செல்வதால் வலஞ்சுழி எனப்பெயர் வந்தது. "மன்னு காவிரி வலஞ்சுழிவாணன்" என்று இத்தலத்து இறைவனை ஞானசம்பந்தப் பெருமான் பாடுகின்றார். பாடல்பெற்ற சிவாலயங்களில் திருவலஞ்சுழியும் ஒன்று. இவ்வாலயத்தின் நுழைவாயிலான கீழக்கோபுரத்தைக் கடந்ததும் இவ்விநாயகர் சந்நிதியுள்ளது. இவ்விநாயகருக்கு "சுவேத விநாயகர்" என்று திருநாமம். இந்திரன் பூசித்த விநாயகர்; கடல்நுரையால் செய்த விக்கிரகம்; கையால் தொட்டு அபிஷேகம் செய்வதில்லை. சங்கினால் மட்டும் தான் அபிஷேகங்கள்; இவருக்கு பச்சைக் கற்பூரம் சாத்தி அபிஷேகம் செய்யப்படுகிறது.
பெயர்க்காரணம் :
சுவேதம் என்ற சொல்லுக்கு வெள்ளை, வெண்மை என்று பொருள். இவ்விநாயகர் வெள்ளை நிறமாக இருப்பதால் வெள்ளை விநாயகர் என்ற பொருள்படும், சுவேத விநாயகர் என்ற திருநாமம் வந்தது.
திருப்பெயர்கள்:
சிவபெருமான் : கபர்த்தீசுவரர், செஞ்சடைநாதர், வலஞ்சுழிநாதர்.
அம்பாள் : பிருகந் நாயகி, பெரிய நாயகி.
தலமரம் : வில்வம்.
தீர்த்தம் : காவிரி, அரசலாறு, ஜடாதீர்த்தம்.
வழிபட்ட அருலாளர்கள் :
ஏரண்ட முனிவர், ஆதிசேஷன், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சிதம்பர முனிவர்.
சிறப்புச் செய்திகள் :
அம்பாள் வலப்பக்கம் திருமணக்கோலத்துடன் அளிக்கிறார். அஷ்டபுஜகாளியம்மன் இங்கு மிகவும் விசேஷம்.
பயன்கள்:
செல்வவளம் பெருகும், வாழ்வில் மகிழ்ச்சியுண்டாகும், பாவங்கள் தொலையும்.
அமைவிடம்:
கும்பகோணம் அருகில் சுமார் 4 கி.மீ தொலைவில் சுவாமி மலைக்கு அருகில் உள்ளது. கும்பகோணத்திலிருந்து நகரப்பேருந்துகள் உள்ளன.
ஆலயம் தேடுவோம். பகுதி - 3 https://meelpaarvai.blogspot.com/2024/05/3.html
Comments
Post a Comment